Tuesday, 12 January 2016

நான் எப்படி வாசிக்கிறேன்-எழுத்தாளர்

நான் எப்படி வாசிக்கிறேன்?- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்

இப்போது 86 வயதாகிறது. இந்த வயதில் வாசிப்புதான் உயிர்மூச்சாக இருக்கிறது. முதுமையில் மறதி பெரிய நோய். அதற்குப் பலியாகாமல் இருக்க வாசிப்பை ஒரு ஆயுதமாகவே கையாள்கிறேன் என்று சொல்லலாம்.

காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் கணினியில் தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள் களை வாசிப்பேன். கவனம் ஈர்க்கும் விஷயங்களில் எனது கருத்துகளையும் பதிவிடுவேன். வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் வருகின்றன. இவற்றில் கல்வி, அறிவியல் சார்ந்த இதழ்கள், எனக்கு மிக விருப்பமானவை. வாசிப்பைப் பொறுத்த அளவில், ‘கண்டதும் கற்கும் பண்டிதன்’ நான். அதனால், எந்தத் துறை நூல் கிடைத்தாலும் சரி, படிப்பேன். பயணங்கள் படிக்க நிறைய நேரம் தரும். அதனால், பயண மூட்டையில் கட்டாயம் புத்தகங்கள் இருக்கும்.


என்னளவில் வாசிப்பில்லா நாள் வீண் நாள். சின்ன வயது தொடங்கி அப்படித்தான். எங்கள் வீட்டில் பெரிய நூலகம் இருந்தது. இராமாயணமும் இருக்கும்; இங்கர்சாலும் இருக்கும். வாழ்க்கை வரலாறு நூல்கள் நிறையவே இருக்கும். வீட்டில் பிள்ளைகள் படிக்கிறார்களோ, இல்லையோ நூலகம் ஒன்று இருக்க வேண்டும்; பத்திரிகைகள் வர வேண்டும். நிச்சயம் அவை ஒரு நாள் அவர்களை உள்வாங்கிக்கொள்ளும். என்னை வாசிப்பை நோக்கி இழுத்தது அதுதான். வீட்டில் ‘தினமணி’, ‘சுதேசமித் திரன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’ ஆகியவை இருக்கும். அந்த நாட்களில் நீண்ட தொடர்கள் என்னைக் கவர்ந்ததில்லை. ‘துப்பறியும் சாம்பு’, ‘நாடோடி’ இப்படியான கதைகளைத் தான் வாசித்தேன். சின்ன பிள்ளைதானே! அப்புறம், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படித்தேன். கூடிய சீக்கிரம் பாரதி பாடல்களை வீராவேசத்துடன் உரக்கப் படிப்பது ஒரு பொழுதுபோக்கானது. கொஞ்சம் வளர்ந்த பின் தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

திரு.வி.க.வின் தமிழ்நடை ரொம்பவும் வசீகரித்தது. நானும்கூட அவரைப் போலவே எழுத முயன்றேன். மு.வ. எழுத்துகள் பிரபலமானபோது அவரது நாவல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரானதும் வாசிப்பு மேலும் அதிகரித்தது. பல்கலைக்கழக முதுகலை வகுப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தத்துவம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த நூல்களை வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். புரிந்தாலும் புரியாவிட்டாலும் படிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

பணியில் இருக்கும்போது நான் ஒரு நூலைப் படித்தவுடன் சக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் நண்பர்களுக்கு நூலை அறிமுகப்படுத்துவேன். ஆசிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். தலைமை ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், ஆசிரியர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்திட மாதக் கூட்டங்களில் அவர்கள் வாசித்த நூல் பற்றிய விமர்சனத்தைக் கூற வேண்டும் என்று ஒரு நியதியைகூடச் சில காலம் நடைமுறைப்படுத்தியது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு புத்தகத்தைப் பல முறை படிப்பேன் என்றாலும், படித்த சுவடே தெரியாத வண்ணம் புத்தகங்களைப் பேணுவது என் இயல்பு. இன்று வாங்கியவைபோல் வைத்திருப்பேன்.

என்னைச் செதுக்கிய மாணவர்கள்-சூர்யா

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: தமிழில் ஓங்கி அடித்த சூர்யா ஆயிஷா இரா. நடராசன



கற்றுக்கொள்வது பள்ளியில் மட்டுமே நடக்கும் ஒரு செயல் என்று கருதுவது கல்விமுறையின் நெருப்புக்கோழி மனநிலைக்கு எடுத்துக்காட்டு.
- எழுத்தாளர் ரஸ்கின் பாண்டு
நமது கல்வி“உன் அனுபவம் எனக்குத் தேவையில்லை. நான் சொல்வதைக் கேள்’’ என்றுதான் குழந்தைகளை அணுகுகிறது. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட மொழியே வேறாக இருக்கிறது. வீட்டின் சூழலில் அனுபவிக்கும் ஒரு மொழியோடு மட்டும் அவர்கள் பள்ளிக்குள் நுழைய முடியாது.
தாய்மொழியில் மட்டுமே குழந்தையின் உண்மையான கற்றல் சாத்தியம் என எனக்குக் காட்டியவர்தான் சூர்யா.
கிண்டர் கார்ட்டன்
வார்தா கல்வி காங்கிரஸ் (1927) கூட்டத்தில் ஆறு முதல் 14 வயதுவரை இலவசக்கல்வி வேண்டும் என்றுதான் காந்தியடிகள் கேட்டார். ஆனால், நாம் இன்று இரண்டரை வயதுக்கு மேல் உள்ள பிஞ்சுகளை லோயர் கிண்டர் கார்ட்டன் (எல்.கே.ஜி), அப்பர் கிண்டர் கார்ட்டன் (யு.கே.ஜி), களுக்கு அனுப்புகிறோம்.
கிண்டர் கார்ட்டன் என்னும் ஜெர்மானியச் சொல்லுக்குக் கருணை மிகுந்த இயற்கை சூழலில் வளர்தல் என்று அர்த்தம். அந்தக் கல்வி இல்லங்களை முதலில் ஆரம்பித்தவர் ஜெர்மன் கல்வியாளர் பெடரிக் புரோபல். நான்கு முதல் ஆறு வயது குழந்தைகளுக்கான காப்பகமாக அவர் 1837- ல் பாட்- பிளாங்க்கன்பர்க் நகரில் முதல் கிண்டர் கார்ட்டனைத் தொடங்கினார். வீட்டில் இருப்பது போலவே , ஆனால் பாடலும் விளையாட்டுகளும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உறங்கலாம். குழந்தைகளைப் பாதுகாப்பது அதே சமயம் வரப்போகும் பள்ளி வாழ்க்கைக்கும் தயார் செய்வது என்பதே அவற்றின் நோக்கம். கிண்டர் கார்டன் உதவியாளர்களாக, பெண்களுக்குப் பயிற்சி அளித்துக் குழந்தைகளின் பாதுகாவலராகவும் கற்றலில் ஊக்குவிப்பவராகவும் நியமித்தார் புரோபல்.
மறுபெயர் வன்முறை
இந்தியாவில் 1980-களில் அமல்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கைதான் இந்தக் கிண்டர்கார்ட்டன் நர்சரிகளைப் பெருகவைத்தது. ஒரு குழந்தை வீட்டில் வளரும்போது ஒன்றரை மாதத்தில் முதல் சொற்களை அறிகிறது. அது அம்மாவிலிருந்தும் தொடங்கலாம். அத்தையிலிருந்து தொடங்கலாம். ‘ஆனை’ … பானை … என்றும் மெல்ல மாடு.. காக்கா என்றும் குழந்தை பார்க்கிற எல்லாவற்றுக்கும் பெயர் வைக்கும். இதுவே கற்றலின் ஆரம்பநிலை.
இதனை அப்படியே தக்கவைத்து இயற்கையாக அமைந்த இதே சூழலில் கற்றலை இதமாக மேம்படுத்துவதே புரோபலின் உண்மையான கிண்டர்கார்ட்டன் கல்வியின் நோக்கம்.
ஆனால், நமது நர்சரி தனியார் கிண்டர் கார்ட்டன்கள் என்ன செய்கின்றன?
தாய்மொழியில் சிந்திக்க அங்கே அனுமதி கிடையாது. ஏற்கெனவே குழந்தை மாடு என்று பெயர் வைத்ததை Cow என்று மறுபடியும் பெயர் வைக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. இது மிகப்பெரிய வன்முறை.
என் சகா சூர்யா
தனது தாய்மொழியைக் கற்றுத் தேர்ந்த ஒரு குழந்தையால் 15 வயதுக்குள் சராசரியாக ஆறு பிற மொழிகளைப் பயில முடியும். ஆனால் நமது கிண்டர் கார்ட்டன் முறை தாய்மொழியை நிராகரிக்கிறது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலுமே சரியாகப் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக ஒரு சந்ததியையே பாழடித்துவிட்டது. தொடக்கக் கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற யஷ்பால் கமிட்டி பரிந்துரையை யாருமே பரிசீலிக்கவில்லை. ஆனால் தாய்மொழிக் கல்வியைத் தக்க வைக்கமுடியும் என எனக்குக் காட்டியவர்தான் சூர்யா.
ஆரம்பத்தில் நான் எல்.கே.ஜி வாத்தியார்தான். பல குழந்தைகளைப் போலவே எனக்கும் அன்றுதான் ‘முதல் நாள்’. வகுப்பு அடைக்கப்பட்டிருந்தது . யாரும் ஓடிவிடக்கூடாதே. குழந்தைகள் கூவிக்கூவி அலறி அழுது கொண்டிருந்தன.
முதல் நாளிலும் அழாத ஒரே ஒரு மாணவரும் இருந்தார். அவர்தான் சூர்யா. ‘‘ ஏன் மாமா…(!) எல்லாரும் அழராங்க… எனக்குப் பிடிக்கல’ என்று சகஜமாய் உரையாடினார். ‘ கதை சொல்வீங்க….. ரைம்ஸ் சொல்வீங்கனு அம்மா சொன்னாங்க. அது எப்ப…? ஏ பி சி டி ….சொல்லித் தருவீங்களா …. மாட்டீங்களா” என்று ஒரே கேள்வி மழையைப் பொழிந்தார். சீக்கிரமே எனது ‘ சகா’ ஆனார் சூர்யா.
தலைகீழ் வாய்ப்பாடு
ஒன்று முதல் 100 வரை ஆங்கிலத்தில் எண்ணுவதும். இரண்டாவது பெருக்கல் வாய்பாட்டை ஆங்கிலத்தில் மனப்பாடமாகச் சொல்வதும் அரையாண்டுக்குப் பிறகு அறிமுகமானது. இதுவும் குழந்தைகள் மீதான அதீத வன்முறை.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. சூர்யாவால் சொல்ல முடியவில்லை. ஆங்கில வாய்மொழித்தேர்வில் அவருக்குப் பூஜ்யம் தருவதா எனப் பதறினேன். அவர் ‘‘நான் தமிழ்ல சொல்லவா’ என்று என் சட்டையைப் பிறாண்டினார்.
‘‘சரி’’ என்று சொன்னது தான் தாமதம் ‘ஓ ரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு’ எனப் பதற்றமே இல்லாமல் வாய்ப்பாடுகளைச் சொன்னார். அதைவிட பெரிய ஆச்சரியமும் இருந்தது.‘‘தலை கீழாவும் சொல்வேன்’’ என்று ‘அதே வாய்ப்பாடுகளைத் தமிழில் தலைகீழாய்ச் சொல்லியும் மறக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தார் சூர்யா, ‘‘ எங்க…. பாட்டி சொல்லிக் குடுத்தாங்க’ என்றவரை ஆரத்தழுவிக் கொண்டேன்.
சூர்யாவின் ‘ஓங்கி அடித்த ஒன்றரை டன் வெயிட் அடியாக’ எனக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி இருந்தது.
தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுப் பள்ளியின் வழிபாட்டு கூட்டத்தில் அவரைக் கொண்டு போய் நிறுத்தினேன். அங்கே கணித வாய்ப்பாடுகளைத் தலைகீழாகச் சொன்னார். 100 திருக்குறள்களைச் சொன்னார். ஆய கலைகள் 64 என ‘‘ நடனம்’ ஓவியம் , இசை என்று படபடவென வெடித்துச் சிதறிப் பள்ளியையே அதிரவைத்தார் சூர்யா.
பிறந்த நாளிலிருந்து தொடங்கிப் பள்ளியில் மட்டுமன்றி நாள் முழுதும் குழந்தை விழித்திருக்கும் அத்தனை நேரமும் எல்லா உறவுகளின் வழியாகவும் தொடரும் ஒரு சுதந்திரக் கற்றல் செயல்பாடுதான் தாய்மொழிக் கல்வி என்று எனக்குக் காட்டிய சூர்யா இப்போது குழந்தைகள் நல மருத்துவராக நெய்வேலி அருகே சேவையாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

கிராமங்களில் பாயும் கல்வி

கிராமங்களுக்குள்ளே பாயும் கல்வி நதி: பேராசிரியர் லெனின்


  • கிராமப்புற மாணவர்களுடன்
    கிராமப்புற மாணவர்களுடன்
  • வேலூரில் இரவுப் பாடசாலையை துவக்கி வைக்கும் லெனின்
    வேலூரில் இரவுப் பாடசாலையை துவக்கி வைக்கும் லெனின்
  • கிராம மக்களுடன்
    கிராம மக்களுடன்

பல கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் கல்வி எனும் அறிவொளியை ஏற்றுவதையே தனது வாழ்நாள் பணியாக செய்துவருகிறார் லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் லெனின்.
திருச்சியின் லால்குடி பக்கத்தில் உள்ள பூவலூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியரின் மகன்தான் அவர். லெனின் தன்னுடைய வாழ்க்கைக்கான முன் மாதிரியாக அவரது அப்பாவைத்தான் வைத்துள்ளார்.

சேவை வாத்தியார்
“ஏதோ பள்ளிக்குப் போனோம், பாடம் எடுத்தோம், வீட்டுக்கு வந்தோம்” என்னும் முறையில் வாழ்ந்தவரல்ல அவரது அப்பா. பக்கத்து கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்த உதவுவது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுவது, குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்று அவரது வேலை பள்ளிக்கூடத்துக்கு வெளியிலும் நீண்டது.
பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்கு பாடங்களை சுவாரஸ்யத்துடன் எடுப்பதிலும் திறமையானவர். வீட்டின் சுவர்கள் முழுவதும் “முயற்சி செய், உன்னால் முடியும், உழைப்பு வீண் போகாது” என்பன போன்ற வாசகங்களை எழுதி வைப்பார். அவை புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் லெனினின் நெஞ்சில் விதைத்தன.
படிப்பதற்கு பரிசு
காலையில் எழுந்தவுடன் செய்தி கேட்க வேண்டும். இரண்டு செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. “ஒரு புத்தகம் படித்தால் காசு தருவேன்” என்று சொல்லி சிறுவயதில் அவரது அப்பா தனது பிள்ளைகளை தூண்டியுள்ளார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே ரஷ்ய ஜனாதிபதி லெனின், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அப்பாவிடம் பரிசுகளை வாங்கியதை லெனின் நினைவுகூர்கிறார். தனது சமூகஅக்கறைக்கும் கல்விச் செயல்பாடுகளுக்கும் தன் அப்பாவே ஆரம்பப் புள்ளி என்கிறார் லெனின்.
1990-களில் பக்கத்து கிராமங்களில் இரவுப் பள்ளிகளை அப்பாவுடன் சேர்ந்து நடத்தியுள்ளார். லெனின் 10-ம் வகுப்பு படிக்கும்போதே மே மாத விடுமுறையில் ஒவ்வொரு கிராமமாக அப்பாவுடன் போய் அந்த வருடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்களைக் கணக்கெடுத்துள்ளார். படிப்பதற்கான பணவசதி இல்லாததால் பலர் மேற்படிப்பு படிக்காமல் இருப்பார்கள். அவர்களின் அம்மா அப்பாவோடு பேசி 10-ம் வகுப்பு முடித்தவர்களை மேல்நிலைப் பள்ளியிலும், 12-ம் வகுப்பு முடித்தவர்களை கல்லூரியிலும் சேர்த்து விடுவோம்.
வாத்தியார் பிள்ளை பேராசிரியர்
லெனின் கல்லூரியின் படித்தபோது, ஏழை மாணவர்களுக்கு உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் புஷ்பராஜும் அவரது அப்பாவைப் போலவே ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளனர்.
2001-ல் சென்னைக்கு வந்த லெனினுக்கு லயோலா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் பணி கிடைத்துள்ளது. தனது அப்பா பள்ளி அளவில் செய்த பணியை கல்லூரி அளவில் விரித்துவிட்டார் லெனின். அவரது உலகமே அவரது மாணவர்கள்தான்.
அவரது வகுப்பறையில் மாணவர்கள் சமூக அக்கறையோடு உருவாகிறார்கள். அவரின் நண்பர்களும் மாணவர்கள்தான்.
மாணவர்களைத் தேடும் ஆசிரியர்
லெனினின் வகுப்பில் முதன்முதலில் நுழையும் மாணவர்களை அவர் தவறாமல் பரிசோதிப்பது நமது சமூகம் பற்றிய அவர்களது புரிதலைத்தான். இதுவரையிலும்கூட எந்த மாணவரும் சரியான ஒரு பதிலை அவருக்குச் சொன்னது இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்து போகிற மாணவர்களிடம் அவர் தவறாமல் “நீ எந்த ஒரு பதவியில் அமர்ந்தாலும் உன்னிடம் வருபவர்களிடம் குறிப்பாக ஏழைகளுக்கு நீ உதவவேண்டும். அப்போதுதான் நான் உனக்கு சரியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறேன் என்ற மனதிருப்தியடைவேன்” என்று சொல்லி அனுப்புகிறார்.
கல்லூரியின் விடுமுறை நாட்களில், லெனினும் அவரது மாணவர்களும் சேர்ந்து விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குப் போகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் சென்னையில் படிக்க அதிகப் பணம் தேவை, அது பணக்காரர்கள் படிக்கும் இடம் என்று பயப்படுவார்கள். அவர்களுக்கு முதலில் தைரியம் கொடுக்கிறோம். கல்லூரிகளில் இடம் வாங்கித் தருகிறோம். மாணவர்களுக்கு அரசாங்கள்ம வழங்குகிற கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் பற்றி எடுத்துச்சொல்கிறோம். அவற்றை வாங்கித் தருகிறோம். சில மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தப் பணத்தை செலவும் செய்கிறோம் என்கிறார் லெனின்.
இப்படி ஒரு ஊருக்குப் போனால் குறைந்தது பத்து மாணவர்களைச் சேர்த்துவிடுவோம். இதன் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு பட்டதாரி உருவானால் கூட, அவரைப் பார்த்து பலர் படிக்க முன்வருவார்கள் என்கிறார் அவர்.
இவ்வாறு அவர் உருவாக்கிய மாணவர்கள் இப்போது அவர்களது கிராமங்களில் படிப்பகங்களை திறந்து இரவுப் பள்ளிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது மேல் படிப்புக்கும் உதவி செய்கிறார்கள் என்கிறார்.
ஐஏஎஸ் வகுப்புகள்
தமிழ் வழியில் ஐஏஎஸ், ஐஏஎஸ் படிப்புகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார் அவரிடம் படித்த வீரபாண்டியன் ஐஏஎஸ் அதிகாரியாகி ஆந்திராவில் பணியாற்றுகிறார். பலர் பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்குப் போயிருக்கிறார்கள்.
இவ்வாறு கல்வி சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாகினால், அது ஒரு சமூக மாற்றத்துக்கு உதவும் என்கிற லெனினின் மாணவர்கள், வெள்ள நிவாரணப் பணிகளும் செய்துள்ளனர். உலகின் எந்த சூழலிலும் வாழும் மாணவர்களை உருவாக்குவதையே தனது ஜனநாயகக் கடமையாகக் கொண்டுள்ளார் லெனின்.

G.O 177. for part time teachers

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.


தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!

15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளபள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதிசெய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்துநாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்விஇணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்வைக்கவும் வேண்டுகிறேன்.

Pre permission need to aided school teachers

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.


இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள்கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.