Thursday, 28 January 2016

பரிசுத் தொகை அதிகரித்தும் தமிழில் படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகளில் பங்கேற்க தயங்கும் மாணவர்கள்

தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றல் போட்டிகளில்மாணவர்கள் பங்கேற்க தயக்கம் காட்டி வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.


தமிழில்படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மாணவர்கள் மத்தியில்வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமையும், பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமையும்,தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.10ஆயிரமும், 2ஆம் இடத்துக்கு ரூ.7ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில போட்டிக்கு பரிந்துரைசெய்யப்படுவார்கள் என்றும், அதில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு, கல்லூரிகள் சார்பில் 15 பேர், பள்ளிகள் சார்பில் 17 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் கட்டுரைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 19 பேர் (பள்ளி), கவிதைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 17 பேர் (பள்ளி) கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 14 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்க நடத்தப்படும் போட்டிகளில் குறைவான மாணவர்கள் பங்கேற்றது போட்டி நடுவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள்செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கேற்றாலும் கூட, குறைந்தபட்சம் 200 பேர் வந்திருக்கலாம்.

போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த காலங்களில் ரூ.1000, ரூ.500 வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கைஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வகை போட்டிகளுக்கு, முன்கூட்டியே தயார் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. போட்டி நடைபெறும்இடத்தில் தலைப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களின் சமயோஜித அறிவுத்திறன் மேம்படும்.

மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் திறனும் அதிகரிக்கும்.பரிசுத்தொகையும் கூடுதலாக இருப்பதால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் அந்தந்த தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பள்ளிக்குழந்தைகள் -கவனம் தேவை

Friday, January 29

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

 "பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.


நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம், குமார் நகர் "இன்பேன்ட் ஜீசஸ்' பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்; மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.


கலெக்டர் ஜெயந்தி பேசுகையில், ""குழந்தைகளிடம் அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்; ஆசிரியர்களை முழுமையாக நம்பி, குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். குழந்தைகளை, ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பழகும் ஆசிரியரை தலைவராக கொண்டு, பள்ளிதோறும் ஆசிரியர்களை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்க வேண்டும். அக்கமிட்டி மூலம் மாணவர்களுக்கு வாரந்தோறும் "கவுன்சிலிங்' தர வேண்டும். பள்ளியில், மறைவிடம் இருக்கக்கூடாது. திறந்தவெளி கிணறு இருந்தால் உடனடியாக மூட வேண்டும். குறும்பு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, தனியாக "கவுன்சிலிங்' தர வேண்டும்,'' என்றார்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் பேசுகையில், ""குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர்களை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். "படி படி' என, துன்புறுத்தாமல், படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நகைச்சுவையாக கல்வி கற்பிக்க வேண்டும்,'' என்றார்.


நீதிபோதனை வகுப்பு தேவை

உளவியல் நிபுணர் அருள்வடிவு பேசுகையில், ""குழந்தைகளின் குடும்ப பின்னணி, பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது, குழந்தையை பற்றி அறிந்து கொள்ள உதவும். இன்றைய குழந்தைகள், பாடப்புத்தகங்களை தவிர, மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தி, பிரச்னை ஏற்படும்போது, அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்க வேண்டும். நற்பண்புகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளின் முன், பெற்றோர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தகாத வார்த்தை பேசினால், அவர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என்றார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



"விளையாட அனுமதியுங்க' மனநல மருத்துவர் ரமேஷ் பரமானந்தம் கூறியதாவது: இதுபோன்ற சம்பவத்துக்கு பெரிதும் காரணம், "டிவி' மற்றும் சினிமா போன்றவற்றில் வெளிப்படும் வன்முறைகளே. குழந்தைகளை வெளியே விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து காயமேற்படும் என கூறி, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், "டிவி', மொபைல்போனுக்கு, குழந்தைகள் அடிமையாகி, நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது, கார்ட்டூன் சேனல்களில் கூட வன்முறை, சண்டை காட்சிகள் வந்து விட்டன. மொபைல் போன்களிலும் சண்டைகள், துப்பாக்கி சுடுதல் என, வன்முறை விளையாட்டுகள் அதிகமுள்ளன. இது, குழந்தைகளின் மனதில் வன்முறை குணத்தை ஏற்படுத்தும்.


குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வெற்றி, தோல்வியை சகஜமாக எடுக்கும் மனநிலை; விட்டுத்தரும் மனப்பாங்கு வரும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குணம், வெறியாகும் மாறும் போதே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எதையும் அன்பாக கற்றுத்தர வேண்டும்; ஆக்ரோஷம் என்பது ஆரோக்கியம் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.


தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்ததும், ஆள் நடமாற்ற பகுதியில், "ஒன் டு ஒன்' என, மாணவர்கள் தங்களுக்குள் மோதும் போக்கு உள்ளது. இதற்குமுன், பள்ளிகளில் நன்னெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன; தற்போது கிடையாது.

பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை ஆகியன, மாணவர்களை தடம் மாற வைக்கிறது. ஒழுக்க கல்வி, விளையாட்டு நேரங்களிலும், மாணவர்கள் படிக்க வைக்கின்றனர். அதனால், மாணவர் மனதில் விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்க முறைகள் மறைந்து வருகின்றன. கல்வித்துறை, மறுகோணத்தில் சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 பாஸ்போர்ட் முன்பதிவு தேதியை இனி விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம் : மண்டல அலுவலர் தகவல்

'பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதியை விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம்,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பொதுமக்கள் நலன் கருதி, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது சில விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்ற விரும்புவோர், புதிய விதியின்படி பிறந்த தேதிக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் அதற்கான அபராதம் செலுத்தி மாற்றலாம். பிறந்த இடம் மாற்ற கோருவோர், சரியான பிறந்த இடம் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பின், அதற்கான நீதிமன்றம் உத்தரவு, அனைத்து கல்வி சான்றிதழில் பிறந்த இடம் மாற்றம் செய்த பின், தவறான பிறந்த தேதி குறிப்பிட்ட காரணத்தை அறிய போலீஸ் அறிக்கைக்குட்பட்ட பிறகு, சரியான பிறந்த இடம் குறிப்பிட்டு புதுப்பித்தால் பாஸ்போர்ட் பெறலாம்.

ஒரே முகவரியில் பெறப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு சமர்ப்பித்தால், ஆன்லைன் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பிறகு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, பிறகு போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இந்த பாஸ்போர்ட் பெறுவோர் படிவம் 1ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதி, முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டது. ஜன., 27 முதல் முன்பதிவு தேதியை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யலாம். டிஜிட்டல் மயமாக்கத்தால் காவல் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்வது 34 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையும் விரைவுபடுத்திட அலைபேசி அல்லது மடிக்கணினி மூலம் காவல் விசாரணையை அனுப்ப வழி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1.20 கோடி பாஸ்போர்ட் மற்றும் அதை சார்ந்த சேவை வழங்கப்

பட்டுள்ளது, என்றார்.


 ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.

தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.


எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


 அகஇ - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அகஇ - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு



 பள்ளிக் கல்வித் துறை-இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



 டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது.


மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு 17 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான மாவட்ட ஒதுக்கீடு 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல், சென்னை, பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும். கலந்தாய்விற்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எல்.ஐ.சி.யின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான மாதந்திர  பொது  மருத்துவ  முகாம்  நடை பெற்றது. முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.   எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார்.எல்.ஐ.சி.யின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமிமுன்னிலை வகித்தனர்.


மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.மாண வர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.
பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள்,விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள்,தைராய்டு தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது,நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல்நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை!

காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்துசெய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் செய்தவர்ககளுக்கு, ஆசிரியர் வேலை வழங்கவேண்டாம் என, முடிவெடுத்து உள்ளன.


பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இந்த முடிவை எடுத்துள்ளதால், காதல் திருமணம் செய்த பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.சென்னையில் உள்ள பிரபல கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைநிறுவனத்தின், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கம் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு துவங்கி உள்ளது.அதில், வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளில், 'விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், துணையை பிரிந்து வாழ்பவராகவோ, காதல் திருமணம் செய்தவராகவோ, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதவராகவோ இருக்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நீக்கம்:

சென்னை, ராயபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர், அங்கே பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்தார். அதனால், அவருக்கு, ஆறு மாதமாக சம்பளம் வழங்க மறுத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நீக்கினர். இதை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு பின், மீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டார்.