Wednesday, 27 January 2016

அரசு இ-சேவை விவரங்களை அறிய புதிய கைபேசி செயலி அறிமுகம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் அனைத்து மண்டலம், பகுதி, கோட்ட அலுவலகங்கள், சென்னை. மதுரை,திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 465 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இம்மையங்களில் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களுக்கு ரூ.50-ம், சமூகநலத்துறை உதவித் திட்டங்களுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்களில் சொத்து வரி, தொழில் வரி கம்பெனி வரியையும் செலுத்தலாம். தற்போது இம்மையங்களில், மின் கட்டணங்களை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவை தவிர, மத்திய அரசின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் தொடர்பான சேவை, அரசுப் பணியாளர் தேர்வாணய தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது, இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை கைபேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் ‘TACTV’ என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டில் இயங்கும் கைபேசிகளில் மட்டும் செயல்படும். இந்த செயலியை பொதுமக்கள் ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதைப் பயன்படுத்தி, இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகில் உள்ள மையத்துக்கு செல்லும் வழி, சேவைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Jan 27, 2016

ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க “புன்னகையை தேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.01.01.2015 முதல் 31.01.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடையதுறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் தொடங்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர் அவ்வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3,000 குழந்தைகள் பேருந்து நிலையம், கோயில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில்; கண்டுபிடிக்கப்பட்டனர்.அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு;ள்ளது.இந்த “புன்னகையை தேடி” (Operation Smile)திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் 01.07.2015 முதல் 31.07.2015 வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக “புன்னகையை தேடி” (Operation Muskkan) திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, “புன்னகையை தேடி” (Oerations Smile II) திட்டமானது 01.01.2016 அன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.