Thursday, 11 February 2016



 அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் (ஆசிரியர்களிடம்) இருந்து வர வேண்டிய மாற்றங்களும்,
ஏற்றங்களும்!!!!


1.ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

3.வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல்,மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4.வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5.மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,கலை, இலக்கிய ,சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6.மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு என்பது வகுப்பறையைத்தாண்டி நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும்,காலத்தோடு தேவையான நல்ல வழிகாட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.


8.ஓவியம்,கலை,
பேச்சு,பாட்டு ,நடனம்,
பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

9.தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

10.எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ!அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

11.எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும்,ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

12.கணிணி,
குறுந்தகடு(CD),
அடர்தகடு(DVD),
வலைத்தளம்,
கட்செவி,சுட்டுரை, மின்னஞ்சல்,
செய்தித்தாள்கள் ,
காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக்கொண்டு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

13.நாம் பணியாற்றும் பள்ளியும்,நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

14.நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம்.எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும்போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

15.விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

ESLC PRIVATE EXAM ANNOUNCEMENT 2016...

ESLC PRIVATE EXAM ANNOUNCEMENT 2016 | ஏப்ரல் 2016-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.04.2016 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள்  18.02.2016 முதல் 29.02.2016  மாலை   5.00 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஊழியர்கள் போராட்டத்தில் அரசின் அணுகுமுறை சரியா?

கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது போராட்டத்தை, அரசியல் என்கிறது ஒரு தரப்பு. பிரச்னையை திசை திருப்ப ஊழியர்கள் மீது, அரசே, அரசியல் சாயம் பூசுகிறது என மறு தரப்பு சொல்கிறது. இதுபற்றி, நேர் எதிர் கருத்துக்கள்:

அரசு ஊழியர்கள், அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடியாது. நடத்தை விதிகள், அதற்கு தடை விதிக்கின்றன. தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவாக இருக்கலாம். ஆனால், அரசு ஊழியர் சங்கங்கள் அப்படியல்ல.சில ஊழியர் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றன; அதை ஏற்க முடியாது. புதிய ஓய்வூதிய
திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை, அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்காக, ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசுகிறது. இதுவே, ஏற்கக்கூடிய, மகிழ வேண்டிய நிகழ்வு தான். அரசின் இந்த முயற்சியை ஏற்காமல், சில சங்கங்கள், ஊழியர்களை திசை திருப்பும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அமைச்சரவை கூடி, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவற்றை, செயல்படுத்த அரசு முடிவெடுக்கும்.இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசை மிரட்டி காரியம் செய்யலாம் என்ற போக்கு சரியல்ல. சண்முகராஜன்மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்


எங்களது போராட்டம், 1991 முதல் நடக்கிறது; தேர்தலை முன்னிட்டு நடத்துவது அல்ல. புதிய ஓய்வூதியத் திட்டம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் விவாதித்து, நிறைவேற்றாத நிலையில், 2003 ஏப்ரல் மாதம், நிர்வாக அனுமதி மூலம், அப்போதைய அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது. இதே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில், புதிய ஓய்வூதிய திட்டம் மசோதா கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து ஓட்டளித்தனர். 2011ல், இக்கோரிக்கையை வலியுறுத்தியபோது, தி.மு.க., அரசு எங்களை ஒடுக்க முற்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்' என்றார்; தேர்தல் வாக்குறுதியும் கொடுத்தார்.
ஆனால், நான்கு ஆண்டுகளாக எதையும் கண்டு கொள்ளாமல், தேர்தல் வருகிறது என, தப்பிக்க நினைக்கின்றனர். எனவே, அரசு ஊழியர் போராட்டத்தில், அரசியலை கலக்க முயற்சிக்கின்றனர். எங்களின் ஓய்வுக்கு பின் கொடுப்பதற்காக, அரசு பிடித்தம் செய்த பணம் எங்கே என கேட்டால், பதில் இல்லை. பணத்தையும் பிடித்தம் செய்துவிட்டு, ஓய்வு பெறும் ஊழியர்களையும் நடுத்தெருவில் அரசு நிற்க வைக்கிறது.பதில் சொல்ல வேண்டிய அரசு, பழியை அரசு ஊழியர்கள் மீது திருப்புவது முறையல்ல.தமிழ்செல்விமாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்


விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.

இந்த டேட்டா சென்டர்களுடன் நாடு முழுவதிலுமுள்ள 123 இ.பி.எப்.ஓ., அலுவலகங்களும் இணைக்கப்படும். இப்பணி ஜூன் மாதத்தில் நிறைவாகும். இதனையடுத்து ஆகஸ்டு மாதம் முதல், பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இப்புதிய வசதியில், சந்தாதாரர்களின் பி.எப். கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யூ.ஏ.என். நம்பரை குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பி.எப்., பணம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்படும். இப்புதிய வசதியால் சந்தாதாரர்கள் சில மணிநேரங்களிலேயே பி.எப்., பணத்தை திரும்ப பெற முடியும்.
லீப் வருடம்:
(Leap year)

லீப் வருடம் என்பது ஏன் வந்தது?

கிரிகோரியன் நாட்காட்டி யில் ஓர்
ஆண்டு என்பது 365
நாட்களைக்கொண்டது. ஆனால்
பூமி சூரியனைச்சுற்றிவரும்
காலம் தோராயமாக 365.2525 நாட்கள்
ஆகும்.

இந்த வேறுபாட்டை சரிசெய்ய
நான்கு ஆண்டுகளுக்கு
ஒருநாளைச் சேர்த்தால்
சரியாகிவிடும் என்பதால் நான்கால்
வகுபடும் எண்ணாலான
ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில்
ஒருநாளைச்சேர்த்தனர்.
அப்படியும் 400 ஆண்டுகளில் 3
நாட்கள் கூடுதலாகும் .
இதனைச்சரிசெய்ய
நூற்றாண்டுகளில் ஒரு திருத்தம்
கொண்டுவந்தனர். அதன்படி 400 ஆல்
வகுபடும் நூற்றாண்டுகள் மட்டுமே
லீப் வருடமாகும்…
சரி ...இதை ஏன் லீப் வருடம்
என்கிறார்கள்?

Leap என்றால் தாவுவது
,தாண்டுவது என்று
பொருள்.ஓராண்டில் வரும் எந்த
நாளும் அடுத்த ஆண்டில் அதற்கு
அடுத்தநாளில் வரும்.
உதாரணத்திற்கு, இந்த ஆண்டு
புதன்கிழமை வரும் ஒருவரின்
பிறந்தநாள் அடுத்தாண்டில்
வியாழக் கிழமை வரும்.காரணம் 365
ஐ 7 ஆல் வகுக்க மீதி ஒன்று
வரும்.அந்த ஒருநாள் கூடுவதே
காரணம். ஆனால் லீப் ஆண்டில்
இரண்டு நாட்கள் தாண்டி பிறந்தநாள்
வெள்ளிக்கிழமையில் வரும்.
இதனால்தான் லீப் ஆண்டு எனப்பெயர்
வந்தது.

அறிந்து கொள்ளுங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005!!!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

சட்டம் எதற்கு?
************************
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.


எங்கிருந்து தகவல் பெறலாம்?
************************************************
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

என்ன தகவல் பெறலாம்?
*************************************
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.ஏ. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

எவ்வாறு பெறுவது?
******************************
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம்,

மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும்,

அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும்.
மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

கட்டணம் விவரம்:
*****************************
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாரிடம் தகவல் கேட்பது?
****************************************
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.

தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
***************************************************************************
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
****************************************************************
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.

முதல் மேல் முறையீடு:
************************************
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.

மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.

முகவரி:
*************
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
ஆலையம்மன் கோவில் அருகில்
தியாகராயர் ரொடு,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580

தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
***************************************************************
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.

விதி விலக்குகள் :
******************************
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
***************************************************************************************
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம்.

நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம்.

ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம்.

உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம்.

டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.

இதற்கான இணையதளங்கள்:
*********************************************
http://www.righttoinformation.gov.in/

http://www.rtiindia.org/

http://www.indg.in/e-governance/rti/bb5bbfba3bcdba3baabcdbaa-baab9fbbfbb5b99bcdb95bb3bcd/view?set_language=ta

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com/ என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "புத்துணர்ச்சி தரும் இளநீர்!"

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.


இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.

மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..

பெண்களின் மாதவிஇலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.
கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.