என்னைச் செதுக்கிய மாணவர்கள்: தமிழில் ஓங்கி அடித்த சூர்யா ஆயிஷா இரா. நடராசன
கற்றுக்கொள்வது பள்ளியில் மட்டுமே நடக்கும் ஒரு செயல் என்று கருதுவது கல்விமுறையின் நெருப்புக்கோழி மனநிலைக்கு எடுத்துக்காட்டு.
- எழுத்தாளர் ரஸ்கின் பாண்டு
நமது கல்வி“உன் அனுபவம் எனக்குத் தேவையில்லை. நான் சொல்வதைக் கேள்’’ என்றுதான் குழந்தைகளை அணுகுகிறது. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட மொழியே வேறாக இருக்கிறது. வீட்டின் சூழலில் அனுபவிக்கும் ஒரு மொழியோடு மட்டும் அவர்கள் பள்ளிக்குள் நுழைய முடியாது.
கிண்டர் கார்ட்டன்
வார்தா கல்வி காங்கிரஸ் (1927) கூட்டத்தில் ஆறு முதல் 14 வயதுவரை இலவசக்கல்வி வேண்டும் என்றுதான் காந்தியடிகள் கேட்டார். ஆனால், நாம் இன்று இரண்டரை வயதுக்கு மேல் உள்ள பிஞ்சுகளை லோயர் கிண்டர் கார்ட்டன் (எல்.கே.ஜி), அப்பர் கிண்டர் கார்ட்டன் (யு.கே.ஜி), களுக்கு அனுப்புகிறோம்.
கிண்டர் கார்ட்டன் என்னும் ஜெர்மானியச் சொல்லுக்குக் கருணை மிகுந்த இயற்கை சூழலில் வளர்தல் என்று அர்த்தம். அந்தக் கல்வி இல்லங்களை முதலில் ஆரம்பித்தவர் ஜெர்மன் கல்வியாளர் பெடரிக் புரோபல். நான்கு முதல் ஆறு வயது குழந்தைகளுக்கான காப்பகமாக அவர் 1837- ல் பாட்- பிளாங்க்கன்பர்க் நகரில் முதல் கிண்டர் கார்ட்டனைத் தொடங்கினார். வீட்டில் இருப்பது போலவே , ஆனால் பாடலும் விளையாட்டுகளும் உண்டு. எப்போது வேண்டுமானாலும் உறங்கலாம். குழந்தைகளைப் பாதுகாப்பது அதே சமயம் வரப்போகும் பள்ளி வாழ்க்கைக்கும் தயார் செய்வது என்பதே அவற்றின் நோக்கம். கிண்டர் கார்டன் உதவியாளர்களாக, பெண்களுக்குப் பயிற்சி அளித்துக் குழந்தைகளின் பாதுகாவலராகவும் கற்றலில் ஊக்குவிப்பவராகவும் நியமித்தார் புரோபல்.
மறுபெயர் வன்முறை
இந்தியாவில் 1980-களில் அமல்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கைதான் இந்தக் கிண்டர்கார்ட்டன் நர்சரிகளைப் பெருகவைத்தது. ஒரு குழந்தை வீட்டில் வளரும்போது ஒன்றரை மாதத்தில் முதல் சொற்களை அறிகிறது. அது அம்மாவிலிருந்தும் தொடங்கலாம். அத்தையிலிருந்து தொடங்கலாம். ‘ஆனை’ … பானை … என்றும் மெல்ல மாடு.. காக்கா என்றும் குழந்தை பார்க்கிற எல்லாவற்றுக்கும் பெயர் வைக்கும். இதுவே கற்றலின் ஆரம்பநிலை.
இதனை அப்படியே தக்கவைத்து இயற்கையாக அமைந்த இதே சூழலில் கற்றலை இதமாக மேம்படுத்துவதே புரோபலின் உண்மையான கிண்டர்கார்ட்டன் கல்வியின் நோக்கம்.
ஆனால், நமது நர்சரி தனியார் கிண்டர் கார்ட்டன்கள் என்ன செய்கின்றன?
தாய்மொழியில் சிந்திக்க அங்கே அனுமதி கிடையாது. ஏற்கெனவே குழந்தை மாடு என்று பெயர் வைத்ததை Cow என்று மறுபடியும் பெயர் வைக்கும் கட்டாயத்துக்கு ஆளாகிறது. இது மிகப்பெரிய வன்முறை.
என் சகா சூர்யா
தனது தாய்மொழியைக் கற்றுத் தேர்ந்த ஒரு குழந்தையால் 15 வயதுக்குள் சராசரியாக ஆறு பிற மொழிகளைப் பயில முடியும். ஆனால் நமது கிண்டர் கார்ட்டன் முறை தாய்மொழியை நிராகரிக்கிறது. தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலுமே சரியாகப் படிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாக ஒரு சந்ததியையே பாழடித்துவிட்டது. தொடக்கக் கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற யஷ்பால் கமிட்டி பரிந்துரையை யாருமே பரிசீலிக்கவில்லை. ஆனால் தாய்மொழிக் கல்வியைத் தக்க வைக்கமுடியும் என எனக்குக் காட்டியவர்தான் சூர்யா.
ஆரம்பத்தில் நான் எல்.கே.ஜி வாத்தியார்தான். பல குழந்தைகளைப் போலவே எனக்கும் அன்றுதான் ‘முதல் நாள்’. வகுப்பு அடைக்கப்பட்டிருந்தது . யாரும் ஓடிவிடக்கூடாதே. குழந்தைகள் கூவிக்கூவி அலறி அழுது கொண்டிருந்தன.
முதல் நாளிலும் அழாத ஒரே ஒரு மாணவரும் இருந்தார். அவர்தான் சூர்யா. ‘‘ ஏன் மாமா…(!) எல்லாரும் அழராங்க… எனக்குப் பிடிக்கல’ என்று சகஜமாய் உரையாடினார். ‘ கதை சொல்வீங்க….. ரைம்ஸ் சொல்வீங்கனு அம்மா சொன்னாங்க. அது எப்ப…? ஏ பி சி டி ….சொல்லித் தருவீங்களா …. மாட்டீங்களா” என்று ஒரே கேள்வி மழையைப் பொழிந்தார். சீக்கிரமே எனது ‘ சகா’ ஆனார் சூர்யா.
தலைகீழ் வாய்ப்பாடு
ஒன்று முதல் 100 வரை ஆங்கிலத்தில் எண்ணுவதும். இரண்டாவது பெருக்கல் வாய்பாட்டை ஆங்கிலத்தில் மனப்பாடமாகச் சொல்வதும் அரையாண்டுக்குப் பிறகு அறிமுகமானது. இதுவும் குழந்தைகள் மீதான அதீத வன்முறை.
அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. சூர்யாவால் சொல்ல முடியவில்லை. ஆங்கில வாய்மொழித்தேர்வில் அவருக்குப் பூஜ்யம் தருவதா எனப் பதறினேன். அவர் ‘‘நான் தமிழ்ல சொல்லவா’ என்று என் சட்டையைப் பிறாண்டினார்.
‘‘சரி’’ என்று சொன்னது தான் தாமதம் ‘ஓ ரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு’ எனப் பதற்றமே இல்லாமல் வாய்ப்பாடுகளைச் சொன்னார். அதைவிட பெரிய ஆச்சரியமும் இருந்தது.‘‘தலை கீழாவும் சொல்வேன்’’ என்று ‘அதே வாய்ப்பாடுகளைத் தமிழில் தலைகீழாய்ச் சொல்லியும் மறக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தார் சூர்யா, ‘‘ எங்க…. பாட்டி சொல்லிக் குடுத்தாங்க’ என்றவரை ஆரத்தழுவிக் கொண்டேன்.
சூர்யாவின் ‘ஓங்கி அடித்த ஒன்றரை டன் வெயிட் அடியாக’ எனக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி இருந்தது.
தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுப் பள்ளியின் வழிபாட்டு கூட்டத்தில் அவரைக் கொண்டு போய் நிறுத்தினேன். அங்கே கணித வாய்ப்பாடுகளைத் தலைகீழாகச் சொன்னார். 100 திருக்குறள்களைச் சொன்னார். ஆய கலைகள் 64 என ‘‘ நடனம்’ ஓவியம் , இசை என்று படபடவென வெடித்துச் சிதறிப் பள்ளியையே அதிரவைத்தார் சூர்யா.
பிறந்த நாளிலிருந்து தொடங்கிப் பள்ளியில் மட்டுமன்றி நாள் முழுதும் குழந்தை விழித்திருக்கும் அத்தனை நேரமும் எல்லா உறவுகளின் வழியாகவும் தொடரும் ஒரு சுதந்திரக் கற்றல் செயல்பாடுதான் தாய்மொழிக் கல்வி என்று எனக்குக் காட்டிய சூர்யா இப்போது குழந்தைகள் நல மருத்துவராக நெய்வேலி அருகே சேவையாற்றி வருகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com
No comments:
Post a Comment