பல கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் கல்வி எனும் அறிவொளியை ஏற்றுவதையே தனது வாழ்நாள் பணியாக செய்துவருகிறார் லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் லெனின்.
திருச்சியின் லால்குடி பக்கத்தில் உள்ள பூவலூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியரின் மகன்தான் அவர். லெனின் தன்னுடைய வாழ்க்கைக்கான முன் மாதிரியாக அவரது அப்பாவைத்தான் வைத்துள்ளார்.

சேவை வாத்தியார்
“ஏதோ பள்ளிக்குப் போனோம், பாடம் எடுத்தோம், வீட்டுக்கு வந்தோம்” என்னும் முறையில் வாழ்ந்தவரல்ல அவரது அப்பா. பக்கத்து கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்த உதவுவது, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுவது, குழந்தைகள் படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்று அவரது வேலை பள்ளிக்கூடத்துக்கு வெளியிலும் நீண்டது.
பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்கு பாடங்களை சுவாரஸ்யத்துடன் எடுப்பதிலும் திறமையானவர். வீட்டின் சுவர்கள் முழுவதும் “முயற்சி செய், உன்னால் முடியும், உழைப்பு வீண் போகாது” என்பன போன்ற வாசகங்களை எழுதி வைப்பார். அவை புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் லெனினின் நெஞ்சில் விதைத்தன.
படிப்பதற்கு பரிசு
காலையில் எழுந்தவுடன் செய்தி கேட்க வேண்டும். இரண்டு செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. “ஒரு புத்தகம் படித்தால் காசு தருவேன்” என்று சொல்லி சிறுவயதில் அவரது அப்பா தனது பிள்ளைகளை தூண்டியுள்ளார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே ரஷ்ய ஜனாதிபதி லெனின், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அப்பாவிடம் பரிசுகளை வாங்கியதை லெனின் நினைவுகூர்கிறார். தனது சமூகஅக்கறைக்கும் கல்விச் செயல்பாடுகளுக்கும் தன் அப்பாவே ஆரம்பப் புள்ளி என்கிறார் லெனின்.
1990-களில் பக்கத்து கிராமங்களில் இரவுப் பள்ளிகளை அப்பாவுடன் சேர்ந்து நடத்தியுள்ளார். லெனின் 10-ம் வகுப்பு படிக்கும்போதே மே மாத விடுமுறையில் ஒவ்வொரு கிராமமாக அப்பாவுடன் போய் அந்த வருடம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்களைக் கணக்கெடுத்துள்ளார். படிப்பதற்கான பணவசதி இல்லாததால் பலர் மேற்படிப்பு படிக்காமல் இருப்பார்கள். அவர்களின் அம்மா அப்பாவோடு பேசி 10-ம் வகுப்பு முடித்தவர்களை மேல்நிலைப் பள்ளியிலும், 12-ம் வகுப்பு முடித்தவர்களை கல்லூரியிலும் சேர்த்து விடுவோம்.
வாத்தியார் பிள்ளை பேராசிரியர்
லெனின் கல்லூரியின் படித்தபோது, ஏழை மாணவர்களுக்கு உதவிய தமிழ்த்துறை பேராசிரியர் புஷ்பராஜும் அவரது அப்பாவைப் போலவே ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளனர்.
2001-ல் சென்னைக்கு வந்த லெனினுக்கு லயோலா கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் பணி கிடைத்துள்ளது. தனது அப்பா பள்ளி அளவில் செய்த பணியை கல்லூரி அளவில் விரித்துவிட்டார் லெனின். அவரது உலகமே அவரது மாணவர்கள்தான்.
அவரது வகுப்பறையில் மாணவர்கள் சமூக அக்கறையோடு உருவாகிறார்கள். அவரின் நண்பர்களும் மாணவர்கள்தான்.
மாணவர்களைத் தேடும் ஆசிரியர்
லெனினின் வகுப்பில் முதன்முதலில் நுழையும் மாணவர்களை அவர் தவறாமல் பரிசோதிப்பது நமது சமூகம் பற்றிய அவர்களது புரிதலைத்தான். இதுவரையிலும்கூட எந்த மாணவரும் சரியான ஒரு பதிலை அவருக்குச் சொன்னது இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்து போகிற மாணவர்களிடம் அவர் தவறாமல் “நீ எந்த ஒரு பதவியில் அமர்ந்தாலும் உன்னிடம் வருபவர்களிடம் குறிப்பாக ஏழைகளுக்கு நீ உதவவேண்டும். அப்போதுதான் நான் உனக்கு சரியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறேன் என்ற மனதிருப்தியடைவேன்” என்று சொல்லி அனுப்புகிறார்.
கல்லூரியின் விடுமுறை நாட்களில், லெனினும் அவரது மாணவர்களும் சேர்ந்து விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குப் போகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் சென்னையில் படிக்க அதிகப் பணம் தேவை, அது பணக்காரர்கள் படிக்கும் இடம் என்று பயப்படுவார்கள். அவர்களுக்கு முதலில் தைரியம் கொடுக்கிறோம். கல்லூரிகளில் இடம் வாங்கித் தருகிறோம். மாணவர்களுக்கு அரசாங்கள்ம வழங்குகிற கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் பற்றி எடுத்துச்சொல்கிறோம். அவற்றை வாங்கித் தருகிறோம். சில மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சொந்தப் பணத்தை செலவும் செய்கிறோம் என்கிறார் லெனின்.
இப்படி ஒரு ஊருக்குப் போனால் குறைந்தது பத்து மாணவர்களைச் சேர்த்துவிடுவோம். இதன் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு பட்டதாரி உருவானால் கூட, அவரைப் பார்த்து பலர் படிக்க முன்வருவார்கள் என்கிறார் அவர்.
இவ்வாறு அவர் உருவாக்கிய மாணவர்கள் இப்போது அவர்களது கிராமங்களில் படிப்பகங்களை திறந்து இரவுப் பள்ளிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது மேல் படிப்புக்கும் உதவி செய்கிறார்கள் என்கிறார்.
ஐஏஎஸ் வகுப்புகள்
தமிழ் வழியில் ஐஏஎஸ், ஐஏஎஸ் படிப்புகளுக்கு இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார் அவரிடம் படித்த வீரபாண்டியன் ஐஏஎஸ் அதிகாரியாகி ஆந்திராவில் பணியாற்றுகிறார். பலர் பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்குப் போயிருக்கிறார்கள்.
இவ்வாறு கல்வி சார்ந்த விழிப்புணர்வு மக்களிடையே உருவாகினால், அது ஒரு சமூக மாற்றத்துக்கு உதவும் என்கிற லெனினின் மாணவர்கள், வெள்ள நிவாரணப் பணிகளும் செய்துள்ளனர். உலகின் எந்த சூழலிலும் வாழும் மாணவர்களை உருவாக்குவதையே தனது ஜனநாயகக் கடமையாகக் கொண்டுள்ளார் லெனின்.