Friday, 15 December 2017

மெல்லக்கற்கும் மாணவர்களிடம் அன்பு காட்டுங்கள்

"மெல்லக்கற்கும் மாணவர்கள் மீது அன்பு காட்டுங்கள்".
" அலுவலர்களின் ஆய்வுகளால்  ஏற்படும் மனஅழுத்தத்தை மாணவர்கள் மீது காட்டாதீர்கள் "

ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் அவர்களின்  தலைமையில்  ஒரு குழு அமைத்து மாணவர்களின் அடைவுத்திறன் பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசுப்பள்ளிகளை  கல்வியில் தேர்ச்சியில் பின் தங்கிய மாவட்டவாரியாக பார்வையிட்டு வருகின்றனர்.

வேலூர்,  பெரம்பலூர்,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பார்வையிட்டு  கடந்த 8.12.17 அன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகள் பார்வையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மீளாய்வு கூட்டம்  நாகை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் 9.12.17 அன்று நடைபெற்றது. அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் பார்வையிடப்படவுளளது.

மேலும் வாரத்திற்கு ஒரு நாள் வட்டார அளவிலும் மாதத்திற்கு ஒரு நாள் மாவட்ட அளவிலும் பள்ளிகள் பார்வையிடப்பட்டு வருகின்றன. இது போன்ற  ஆய்வுகளை வரவேற்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம்  வாசித்தல், எழுதுதல் அடிப்படை கணிதத்திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் A,B,C மற்றும் D என்று தரம் பிரிக்கப்படுகிறார்கள்.
இதில் C மற்றும் D பிரிவினர் மெல்லக்கற்கும் மாணவர்களாக இருக்கிறார்கள்.
 பார்வையிடும் குழு மெல்லக்கற்கும் மாணவர்கள்  (slow learners) மீது கூடுதல் கவனம் செலுத்த ஆசிரியர்களை வற்புறுத்துகிறது.  இம்மாணவர்களை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று ஆசிரியர்களை வலியுறுத்துவதால் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இவர்களை சுற்றியே வருகிறார்கள். இது தற்போது எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளது . முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காவிட்டாலும் இக்குழு பார்வையிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் குழு பார்வைக்குபின் மெல்லக்கற்கும் மாணவர்களின் பள்ளி வருகை குறிப்பிடத்தக்க  அளவில்  குறைந்துள்ளது. இதற்கு காரணம் அலுவலர்களின் ஆய்வுகளால்  ஏற்படும் நெருக்கடியிலிருந்து  தப்பிக்க ஆசிரியர்கள் அவர்கள் மீது கொடுக்கும் அழுத்தம் தான்.
கல்வித்துறையின் அதிரடி ஆய்வால் மெல்லக்கற்கும் மாணவர்கள் தமிழக அரசுப்பள்ளிகளில் இனி இருக்கமாட்டார்கள்(?).

மெல்லக்கற்கும் மாணவர்களின் பள்ளி வருகை குறைந்தால் என்னவாகும்?
அவர்கள் பள்ளிக்கு வர பயந்து எதிர்வரும் ஆண்டுகளில்  இடைநிற்றல் ஏற்பட்டு இடைநின்ற  (drop outs) மாணவர்களாகி விடுவார்கள்.  சிறுவர் நீதிமன்றங்களால் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மாணவர்கள் பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட இடைநின்ற மாணவர்களே. வீட்டில் இருந்து அக்கம்பக்கத்தினரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகளும் சரியாக படிப்பு வரவில்லை என்ற காரணத்தினாலும் பள்ளிகளால் கைவிடப்பட்டவர்களே. எனவே ஆய்வு அலுவலர்கள் ஆசிரியர்களை 20 க்கு மேற்பட்ட பதிவேடுகளை உடனுக்குடன் பதிவு செய்வதுடன் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு அதிக பயிற்சி அளிக்கக்கோருகிறார்கள் என்ற வேலைப்பளு மற்றும் மனஉளைச்சலை நாம் பொறுத்துக்கொள்வோம் . இந்ந அழுத்தத்தினால்  மாணவர்கள் மீது கண்டிப்பு மற்றும் தீவிர பயிற்சி என்ற பெயரில் கோபமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று ஆசிரியர்கள்  அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய அரசால் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே 5 முதல் 13 வயது வரை உள்ள நூறு சதவீதம் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் இல்லாமல் பயிலவேண்டும் என்பதே.  ஆய்வுகளால் எதிர்விளைவு ஏற்பட்டு அரசின் இந்த நோக்கம் சிதையாமல் காக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களாகிய நமக்கு உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை கிராமப்புற மாணவர்கள் அவர்களின் சூழ்நிலைகளால் கற்றலிலும் சற்று பின்தங்கியே இருப்பார்கள் . இவர்களுக்கு இருக்கும் ஒரே போக்கிடம் நமது அரசுப் பள்ளிகள் மட்டுமே.  நாமும்  அவர்களிடம் கடுமையாக  நடந்துக்கொண்டால் அவர்களின் நிலை பரிதாபமாகிவிடும்  இதை நாம் புரிந்துக் கொண்டு இம்மாணவர்களை அன்பாக நடத்துவோம்.
எந்த மாணவனுக்கு எந்த நேரத்தில் எந்தப்பாடத்தை எப்படி கற்பிக்க வேண்டும் என்ற சுதந்திரம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு உள்ளது.  குறிப்பிட்ட முறையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் கற்பிக்க வேண்டும் என்று  கட்டாயப்படுத்தி நமது கைகள் கட்டப்பட்டுள்ளதாக எண்ண வேண்டாம்.



நாம் மாணவர்களாக இருந்த காலம் தொட்டே அரசுப்பள்ளிகளில் மெல்லக்கற்கும் மாணவர்கள் 5 சதவீதமாவது இருந்து வந்துள்ளனர். எவ்வளவு முயன்றாலும் கல்வி சார்ந்த   செயல்பாடுகளில் ஈடுபாடு காட்ட முடியாத மாணவர்களை ஆசிரியர்கள் சிறப்பாக மடைமாற்றம் செய்ததினால் விளையாட்டு வீரர்களாக, நடிகர்களாக, சிற்ப கலைஞர்களாக ,வியாபாரிகளாக வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இது போன்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து நமது மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தொடர்வோம்.

நம்முடைய தவறான அணுகுமுறையால் ஒரு மாணவன் கூட இடைநிற்றல் இருக்கக்கூடாது என உறுதி ஏற்போம்.

                  கருத்து - பகிர்வு

No comments:

Post a Comment