Thursday, 21 January 2016

தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு

தமிழகத்தின் நிதிச் சுமை அதிகரிப்பு!

பொருளாதாரத் தேக்க நிலை, வரி வருவாய் குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தின் நிதிச் சுமை மேலும் அதிகரித்துள்ளது என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
 இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
 14-ஆவது நிதிக் குழுவின்
பரிந்துரைகளால் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகமான சூழல், தமிழகத்தின் நிதி நிலையை மோசமாகப் பாதித்துள்ளது.
 காரணங்கள் என்ன? தொடரும் பொருளாதாரத் தேக்க நிலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் பெட்ரோலியப் பொருள்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறைந்து வருவது போன்ற பாதிப்புகளுடன், மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்களிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் தமிழக அரசின் நிதிச் சுமையை மேலும் கூடுதலாக்கியுள்ளன.
 மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: பொருள்கள், சேவைகள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதியான, தெளிவான நிலைப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த வரியை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்த முன்வடிவு கொண்டுவருவதற்கு முன்பாக, இழப்பீடு ஈடு செய்யும் காலம், இழப்பினைக் கணக்கிடும் முறை, நிகர வருவாய் இழப்பு ஏற்படாத வரி அளவு, குறைந்தபட்ச வரி கட்டுதல், வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருள்கள், மாநிலங்களுக்கு இடையேயான வரி விதிப்பு முறை, இரட்டை நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த தெளிவு ஆகிய முக்கிய இனங்களின் மீது ஒருமித்த கருத்தை எட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிதி சுயாட்சி-நிரந்தர வருவாய் இழப்பு ஆகியன குறித்த மாநிலங்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 முதன்மை மாநிலமாக...: நிதிச் சுமை அதிகரித்துள்ள போதிலும் வளர்ச்சியிலும், பொருளாதார வளத்திலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை எட்டிட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் தமிழக அரசு தொய்வின்றி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment